அலங்காரத்துடன் சபரிமலை வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
அலங்காரத்துடன் சபரிமலை வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
ADDED : டிச 23, 2024 12:35 AM

சபரிமலை : சபரிமலை வரும் வாகனங்களை உருவ மாற்றம் செய்து அலங்கரித்து வரக்கூடாது என கேரள மாநில மோட்டார் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர். அவ்வாறு வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில வாகனங்களுக்கு, 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை பல்வேறு வகையில் அலங்கரித்து வருகின்றனர். வாழைக்குலை, இளநீர் போன்றவற்றை கட்டியும், வாகனத்தை பல்வேறு கோவில்களின் மாதிரி வடிவமைத்தும் வருகின்றனர். இவ்வாறு வரும் வாகனங்களை எதிரே வரும் வாகனங்களின் டிரைவர்கள் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சபரிமலை பாதைகள் வளைவுகள் நிறைந்தவை. பக்கவாட்டில் மிக ஆழமான பள்ளங்களும் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களால், பிற டிரைவர்களின் கவனம் திசை திரும்பினால் பெரிய விபத்து ஏற்படும் என, கேரள மாநில வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
மேலும், அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபெருக்கியை அமைத்து பாடல்களை ஒலிபரப்பி வருவது, கண்கவர் விளக்குகளால் அலங்கரித்து வருவது போன்றவை, வனவிலங்குகளையும் பாதிக்கிறது. வாழைக்குலை, இளநீர் குலை போன்றவை வனவிலங்குகளை கவர்ந்திழுக்கும்.
எனவே, இப்படிப்பட்ட செயலில் ஈடுபட வேண்டாம் என்று, மோட்டார் வாகனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்தாலும், ஏராளமான வாகனங்கள் இவ்வாறு தொடர்ந்து வருகின்றன. விதவிதமான அலங்காரங்களுடன் வரும் வாகனங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களுடைய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வேறு வாகனங்களில் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மோட்டார் வாகனத்துறை சபரிமலை பாதைகளில் தொடங்கியுள்ளது.