டில்லியில் பாஜ எம்.பி. வீட்டில் திடீர் தீ; மின்கசிவு காரணமா என விசாரணை
டில்லியில் பாஜ எம்.பி. வீட்டில் திடீர் தீ; மின்கசிவு காரணமா என விசாரணை
ADDED : ஜன 14, 2026 03:34 PM

புதுடில்லி: மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜ எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் வீட்டில் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.
டில்லியில் அன்னை தெரசா கிரசென்ட் மார்க் பகுதியில் பாஜ மூத்த தலைவரும், எம்பியுமான ரவி சங்கர் பிரசாத் வசித்து வருகிறார். இவரின் வீடு அரசு இல்லம் ஆகும். இந்த வீட்டில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், அதிகாரிகள் விசாரணை நடத்திய போது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது தெரிந்தது. ஆனால் எவ்வாறு தீப்பிடித்தது என்பதற்கான காரணங்கள் கண்டறியப்பட வில்லை.
வீட்டில் தீப்பிடித்தது குறித்து எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தமது எக்ஸ் வலைதள பதிவில் உறுதி செய்திருக்கிறார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
இன்று, எனது டில்லி வீட்டில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. மின்சார கோளாறே இதற்கு காரணமாக இருக்கலாம். வீட்டிலுள்ள சில பொருட்கள் சேதம் அடைந்திருக்கும் என்று எண்ணுகிறோம்.
நான், எனது மனைவி, மகனுடன் பாட்னாவில் இருக்கிறன். சம்பவத்தை அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அனைவரும் பாதுகாப்புடன் உள்ளோம். அனைவரின் நலன்விசாரிப்புகளுக்கு நன்றி.
இவ்வாறு அவர் தமது பதிவில் கூறியுள்ளார்.

