வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் கடைகளுக்கு தீ பரவியது: ஹிமாச்சலில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி
வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் கடைகளுக்கு தீ பரவியது: ஹிமாச்சலில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி
ADDED : ஜன 12, 2026 06:25 PM

சிம்லா: ஹிமாச்சலில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததால், தீ பரவி 10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. மேலும் தீயில் சிக்கிய சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.
ஹிமாச்சல் மாநிலம் சோலன் மாவட்டத்தில் ஆர்க்கி பழைய பஸ் நிலைய சந்தைப்பகுதியில், குடியிருப்புகளும் கடைகளும் உள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலையில் வீட்டிலிருந்த சிலிண்டர்கள் திடீரென வெடித்ததால் தீ வேகமாக பரவியது, அதை தொடர்ந்து அருகில் இருந்த 10 க்கும் மேற்பட்ட கடைகளிலும் தீ பற்றியதால் கடைகள் எரிந்து சாம்பலாகின. இதனையடுத்து தீ பரவல் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து தீயணைப்பு, மீட்பு படையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்தனர்.
தீ பற்றியது குறித்து போலீஸ் அதிகாரி கவுரவ் சிங் கூறியதாவது:சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேபாளத்தை சேர்ந்தவர்கள் குடியிருந்து ஆர்க்கி சந்தை பகுதியில் வேலை பார்த்து வந்தவர்கள் என தெரியவந்தது. குடியிருப்புகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 9 பேர் காணாமல் போன நிலையில், மீட்பு படையினர், இடிபாடுகளுக்குள் தேடியதில் சிறுவன் உள்பட 3 பேர் பலியான நிலையில், உயிரிழந்த 8 வயது சிறுவன் பிரியான்ஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது எஸ்டிஆர்எப், என்டிஆர்எப் மீட்பு குழுவினர் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தீக்கிரையான கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு கவுரவ் சிங் கூறினார்.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு,இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், விபத்து குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே,உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும்,காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அவர் உத்தரவிட்டுள்ளார்.

