ADDED : நவ 27, 2024 12:36 AM
திருச்சூர்,ரளாவில் சாலையோரம் கூடாரம் அமைத்து துாங்கியவர்கள் மீது, லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஆறு பேர் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிகா பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.
நேற்று அதிகாலை மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு கண்ணுாரில் இருந்து வேகமாக வந்த லாரி, திடீரென அந்த கூடாரம் மீது மோதியது.
அங்கு துாங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகள், இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல் உறுப்புகள் சாலையோரம் சிதறிக்கிடந்தன. மேலும் ஆறு பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் நடத்திய விசாரணையில் கிளீனர் லாரியை ஓட்டியதும், அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்.
விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற இருவரையும், அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.