ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக இரண்டு இன்ஜினியர்கள் மீது வழக்கு
ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக இரண்டு இன்ஜினியர்கள் மீது வழக்கு
ADDED : நவ 05, 2025 02:16 AM

தானே: மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் ரயில் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மத்திய ரயில்வே பொறியாளர்கள் இருவர் மீது, கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரயில்வே வரலாற்றில் அதன் ஊழியர்கள் மீது நேரடியாக வழக்குப் பதிவு செய்திருப்பது இதுவே முதன்முறை யாகும்.
மஹாராஷ்டிராவில் தானேவின் கசாராவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினல் ரயில் நிலையத்திற்கு, கடந்த ஜூன் 9ம் தேதி காலை புறநகர் ரயில் சென்றது.
கூட்டநெரிசல் காரணமாக ஏராளமான பயணியர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தனர்.
இந்த ரயில், மும்பை புறநகர் பகுதியான மும்ப்ரா ரயில் நிலையம் அருகே வந்தபோது, பயணியருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், படிக்கட்டுகளில் நின்றிருந்த சிலர் எதிர் பாராதவிதமாக ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்; ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
அதில், 'விபத்துக்கு சில நாட்களுக்குமுன் அவ்வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தொழில் நுட்ப அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன.
'கவனக்குறைவாக செயல்பட்டதால், உதவி கோட்டப் பொறியாளர் விஷால் டோலாஸ் மற்றும் மூத்த பிரிவு பொறியாளர் சமர் யாதவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

