திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக முன்னாள் தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பு
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக முன்னாள் தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பு
ADDED : நவ 16, 2025 01:58 AM

சபரிமலை: சபரிமலை உள்ளிட்ட தென் கேரள கோயில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஜெயக் குமார் நேற்று பொறுப்பேற்றார்.
சபரிமலை உள்ளிட்ட கோயில்களை நிர்வகிப்பதற்காக 1949 ஆகஸ்ட் 1 ல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு உருவாக்கப்பட்டது. அதன் 24 - வது தலைவராக முன்னாள் கேரள அரசு தலைமைச் செயலர் கே.ஜெயக்குமார் நேற்று பொறுப்பேற்றார். அவருடன் மற்றொரு உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ராஜு பொறுப்பேற்றார்.
தேவசம்போர்டின் பதவி காலம் நான்கு ஆண்டுகளாக இருந்தது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் காங்கிரஸ் தலைவர்களை பதவி நீக்கம் செய்வதற்காக இதன் பதவிக்காலத்தை மார்க்சிஸ்ட் அரசுகுறைத்தது. தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளது.
சபரிமலை விஷயங்களை சரியாகப் புரிந்து வரும்போது நிர்வாகிகள் பதவிகாலம் முடிந்து வெளியே செல்வது வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சபரிமலை சீசன் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது ஊழியர்கள் , நிர்வாகிகள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தேவசம்போர்ட்டின் பதவி காலத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு மட்டத்தில் கோரிக்கை இருந்தும் மார்க்சிஸ்ட் அரசு அதை கண்டு கொள்ளவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் தேவசம்போர்டு தலைவராக இருந்த காலத்தில் தான் சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் அக்கட்சிக்கு எதிராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் கேரளாவில் பொதுவான மனிதராக கருதப்படும் ஜெயக்குமாரை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் தங்கம் கொள்ளையால் கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை குறைக்க முடியும் என்று அக்கட்சி நம்புவதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே இரண்டு முறை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முதன்மை ஆணையர் பொறுப்பு வகித்துள்ளார்.

