முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
ADDED : டிச 13, 2025 12:30 AM

லாத்துார்: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல், 90, மஹாராஷ்டிராவின் லாத்துாரில் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல், வயோதிகம் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான மஹாராஷ்டிராவின் லாத்துாரில் உள்ள இல்லத்தில் நேற்று காலை காலமானார்.
பாட்டீல் மறைவுக்கு ஜனாதிபதி திரவு பதி முர்மு, பிரதமர் மோடி, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவராஜ் பாட்டீல் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. காலமான பாட்டீலுக்கு சைலேஷ் பாட்டீல் என்ற மகன் உள்ளார்.
சிவராஜ் பாட்டீல், 1935 அக்டோபர் 12ல் பிறந்தார். 1966ல் லாத்துார் நகராட்சி தலை வராக தன் அரசியல் பயணத்தை துவக்கினார். பின்னர், எம்.எல்.ஏ.,வாக இருமுறை பதவி வகித்துள்ளார். 1977 - 79ல் மஹாராஷ்டிர சட்டசபை துணை சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
பின், 1980ல் தேசிய அரசியலில் நுழைந்த பாட்டீல் ஏழு முறை லோக்சபா எம்.பி.,யாகவும், 1991 - 96ல் லோக்சபா சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர், கடந்த 2004 - 08ல் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்து 2008ல் விலகினார்.

