சத்தீஸ்கர் மதுபான ஊழல் வழக்கு மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
சத்தீஸ்கர் மதுபான ஊழல் வழக்கு மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
ADDED : செப் 20, 2025 02:35 AM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மதுபான ஊழல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிரஞ்சன் தாசை மாநில ஊழல் தடுப்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முன்னதாக, 2018 - 23 வரை காங்கிரசை சேர்ந்த பூபேஷ் பாகேல் முதல்வராக பதவி வகித்த போது, அரசு நடத்தும் மதுபான கடைகளுக்கு தனியாரிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
இதில், 2,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது.
இந்த மோசடியில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல், காங்., முன்னாள் அமைச்சர் கவாசி உள்ளிட்டோரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
இதையடுத்து மதுபான ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில ஊழல் தடுப்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும், மதுபான கொள்முதலில் ஊழல் நடந்ததாக கடந்த ஆண்டு ஜன., 17ல், 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் கணக்கில் காட்டாத மதுபானங்களை விற்றது, மதுபான கடை அதிகாரிகளை இடமாற்றம் செய்ததன் மூலம் ரகசியமாக செயல்பட்ட, 'சிண்டிகேட்'டுக்கு பல கோடி ரூபாயை பலன் அடைய செய்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மாநில கலால் துறை முன்னாள் கமிஷனருமான நிரஞ்சன் தாசை ஊழல் தடுப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது ஐ.ஏ.எஸ்., நிரஞ்சன் தாஸ். முன்னதாக அனில் துடேஜா என்ற ஐ.ஏ.எஸ்., அதி காரியை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.