'இண்டி' கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு
'இண்டி' கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு
ADDED : ஆக 20, 2025 03:35 AM

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில், 'இண்டி' கூட்டணி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி, 79, அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, கடந்த மாதம் 21ல், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார். இதையடுத்து, செப்., 9ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. வெற்றி பெறுபவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.
மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், 68, அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை எதிர்த்து, வேட்பாளரை களமிறக்க, காங்., - தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முடிவு செய்தது.
இது தொடர்பாக, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டில்லியில் கடந்த இரு நாட்களாக நடந்த ஆலோசனையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், நேற்று மீண்டும் ஆலோசனை நடந்தது.
இதில், துணை ஜனாதிபதி வேட்பாளராக, தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இவர், வரும் 21ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.