லோக்சபா உரிமைகள் குழு தலைவராக மாஜி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமனம்
லோக்சபா உரிமைகள் குழு தலைவராக மாஜி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமனம்
ADDED : மார் 04, 2026 01:17 AM

புதுடில்லி: லோக்சபா உரிமைகள் குழு தலைவராக பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, வரும் 9ம் தேதி துவங்கி, ஏப்., 2 வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
பிரதமர் மோடியின் சமீபத்திய இஸ்ரேல் பயணம், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்ட மேற்குவங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர்கள் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டது உட்பட, பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் விதிமீறி நடந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருக்கும் எம்.பி.,க்களை சமாளிக்கும் வகையில், லோக்சபா உரிமைகள் குழுவை, சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று நியமித்தார்.
அதன்படி, 15 எம்.பி.,க்கள் கொண்ட இந்த குழுவின் தலைவராக முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024ல், 18வது லோக்சபா அமைந்த பின், முதல் முறையாக உரிமைகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எம்.பி.,க்களின் உரி மைகள் மீறப்படும் போதோ அல்லது சபையின் மாண்புக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான புகார்கள் எழும்போதோ, அதனை விசாரித்து உரிய பரிந்துரைகளை வழங்குவதே இக்குழுவின் முதன்மைப் பணி.
இந்த குழுவில், பா.ஜ., எம்.பி.,க்கள் பிரிஜ்மோகன் அகர்வால், ராம்வீர் சிங் பிதுரி, சங்கீதா குமாரி சிங் தியோ, ஜெகதாம்பிகா பால் , திரிவேந்திரா சிங் ராவத், ஜெகதீஷ் ஷெட்டார் இடம் பெற்றுள்ளனர்.
காங்., - எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், தாரிக் அன்வர், மணிஷ் திவார், தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, திரிணமுல் காங்.,கின் கல்யாண் பானர்ஜி, சிவசேனாவின் ஸ்ரீரங் அப்பா பர்னே, உத்தவ் பிரிவு சிவசேனாவின் அர்விந்த் சாவந்த் மற்றும் சமாஜ்வாதியின் தர்மேந்திரா யாதவ் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 'கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், லோக்சபா உரிமைகள் குழு நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது' என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

