பயங்கரவாதிகள் வேலை பார்த்த அல் பலாஹ் பல்கலை மீது மோசடி வழக்கு
பயங்கரவாதிகள் வேலை பார்த்த அல் பலாஹ் பல்கலை மீது மோசடி வழக்கு
ADDED : நவ 15, 2025 07:07 PM

புதுடில்லி: டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவ பயங்கரவாதிகள் பணியாற்றி வந்த அல் பலாஹ் பல்கலை மீது போலீசார் மோசடி உள்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி டில்லி செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். பயங்கரவாத தாக்குதலாக அறியப்பட்ட இந்த சம்பவத்தில் காரை இயக்கி வெடிக்கச்செய்தது உமர் நபி என தெரியவந்தது. அதேபோல், இந்த குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரியவந்ததை அடுத்து அந்த பல்கலை புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் மட்டுமின்றி, அமலாக்கத்துறையினர், டில்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.
அல் பலாஹ் மருத்துவமனைக்கு கிடைக்கும் நிதி மற்றும் அதன் வரவு, செலவு குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் பெற்றதாக அல் பலாஹ் பல்கலை சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், இதற்கு என்ஏஏசி மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால், போலியான தகவலை குறிப்பிட்டிருந்தது அம்பலமானது.
இந்த நிலையில், அல் பலாஹ் பல்கலை மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார், இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏமாற்றுதல் மற்றும் முறைகேடு ஆகிய இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ததுடன், பல்கலைக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், பல்கலை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி நோட்டீஸ் அளித்துள்ளனர்.

