'பெண் சிங்கம்' ஆக இருந்த நான் பா.ஜ., ஏஜென்ட் ஆகிவிட்டேனா?: ஸ்வாதி மாலிவால் பாய்ச்சல்
'பெண் சிங்கம்' ஆக இருந்த நான் பா.ஜ., ஏஜென்ட் ஆகிவிட்டேனா?: ஸ்வாதி மாலிவால் பாய்ச்சல்
ADDED : மே 21, 2024 11:46 AM

புதுடில்லி: ''பிபவ் குமாருக்கு எதிராக புகார் அளிக்கும் வரை, 'பெண் சிங்கம்' ஆக இருந்த நான், இப்போது பா.ஜ., ஏஜெண்டாகிவிட்டேனா? '' என ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கேள்வி எழுப்பினார்.
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி., ஸ்வாதி மாலிவால். இவர் கடந்த 13ம் தேதியன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க சென்றபோது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் என்பவர் ஸ்வாதியை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் புகாரளித்ததை தொடர்ந்து பிபவ் குமாரை போலீசார் கைது செய்தனர். பா.ஜ.,வின் தூண்டுதலால் தான் ஸ்வாதி மலிவால் வேண்டுமென்றே ஆம்ஆத்மி மீது புகாரளிப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இது தொடர்பாக ஸ்வாதி மலிவால் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டதாவது: ஊழல் செய்ததாக என் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி அமைச்சர்கள் நேற்று முதல் பொய்களைப் பரப்பி வருகின்றனர். பா.ஜ.,வின் அறிவுறுத்தலின் பேரில் இதையெல்லாம் செய்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த எப்.ஐ.ஆர் 8 ஆண்டுகளுக்கு முன்பு 2016ல் பதிவு செய்யப்பட்டது, அதன் பிறகு முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் கவர்னர் இருவரும் மகளிர் ஆணையத்தின் தலைவராக என்னை இரண்டு முறை நியமித்தனர்.
பெண் சிங்கம்
பணப் பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இந்த வழக்கு முற்றிலும் போலியானது என்றும் கூறியது. அவர்களைப் பொறுத்தவரை, நான் பிபவ் குமாருக்கு எதிராக புகார் அளிக்கும் வரை, 'பெண் சிங்கம்' ஆக இருந்த நான், இப்போது பா.ஜ., ஏஜெண்டாகிவிட்டேனா?
நான் உண்மையைப் பேசியதால்தான் எனக்கு எதிராக ஒட்டுமொத்த ட்ரோல் கும்பலும் செயல்படுகிறது. ஸ்வாதியின் பெர்சனல் வீடியோவை லீக் செய்வதற்காக, கட்சியில் உள்ள அனைவரும் ஸ்வாதியின் பெர்சனல் வீடியோ இருந்தால் அனுப்புங்கள் என்று கூறுகின்றனர்.
உண்மை வெளிவரும்
எனது உறவினர்களின் கார் எண்களைப் பயன்படுத்தி அவர்களின் விவரங்களை டுவீட் செய்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார்கள். பொய்கள் நீண்ட காலம் நீடிக்காது. ஆனால், அதிகார போதையிலும், யாரையாவது வீழ்த்த வேண்டும் என்ற வெறியிலும் இருக்கின்றனர். உண்மை வெளிவரும். நீங்கள் பரப்பும் ஒவ்வொரு பொய்க்காகவும் உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

