ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு நவீன உபகரணங்கள்: 'ஸ்மார்ட் டிவி, புரொஜெக்டர்' வாங்க அரசு நிதி
ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு நவீன உபகரணங்கள்: 'ஸ்மார்ட் டிவி, புரொஜெக்டர்' வாங்க அரசு நிதி
ADDED : மே 31, 2025 01:39 AM

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,க்கள் தங்கள் கடமைகளை திறம்பட செய்வதற்காக, அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கிக் கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,க்கள் பணி செய்வதற்காக, 'டெஸ்க்டாப்' கணினி, 'லேப்டாப், பென் டிரைவ், பிரின்டர், ஸ்கேனர், யு.பி.எஸ்., ஸ்மார்ட் போன்' ஆகிய உபகரணங்களை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி வருகிறது.
இதோடு சேர்த்து, அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கிக் கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
'ராஜ்யசபா உறுப்பினர்களின் கணினி உபகரணங்களுக்கான நிதி உரிமைத் திட்டம்' என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படுகிறது.
மூன்றாண்டுகளுக்கு மேல் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகிக்க தேர்வாகும் அல்லது நியமிக்கப்படும் உறுப்பினர்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாய் வரை நிதி அளிக்கப்படும்.
மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு தற்காலிக காலியிடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்களுக்கு தலா, 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
ஒரு உறுப்பினரின் மூன்று ஆண்டு பதவிக்காலத்திற்குப் பின், குறைந்தபட்ச பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு குறையாமல் இருக்கும்பட்சத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு கூடுதலாக தலா, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த நிதியை வைத்து நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு மென்பொருள்களை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அசல் ரசீதுகளை அளித்து, அதற்கான தொகையை அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

