இந்தியா வந்தார் ஜெர்மனி அதிபர்; பிரதமர் மோடியை சந்தித்து பேச ஏற்பாடு
இந்தியா வந்தார் ஜெர்மனி அதிபர்; பிரதமர் மோடியை சந்தித்து பேச ஏற்பாடு
ADDED : ஜன 12, 2026 06:48 AM

புதுடில்லி: 2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இன்று இந்தியா வந்தடைந்தார். ஆமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பு ஏற்று ஆமதாபாத் விமான நிலையம் வந்த அவருக்கு, அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் சபர்மதி ஆசரமத்தை பார்வையிடுகின்றனர். 10 மணியளவில் சபர்மதி ஆற்றங்கரையோரம் நடக்கும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து, 11.15 மணியளவில் காந்தி நகரில் உள்ள மஹாத்மா மந்திரில் பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸூம் சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வரும் ஜனவரி 27ம் தேதி இந்தியா - ஐரோப்பிய உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், ஜெர்மனி அதிபர் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

