ஜெர்மன் பெண்ணை இந்து முறைப்படி கரம் பிடித்தார் புதுச்சேரி ஏட்டு மகன்
ஜெர்மன் பெண்ணை இந்து முறைப்படி கரம் பிடித்தார் புதுச்சேரி ஏட்டு மகன்
ADDED : ஆக 25, 2011 11:21 PM
புதுச்சேரி : ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணிற்கும், புதுச்சேரி ஏட்டு மகனுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி வி.பி.சிங்., நகரில் வசிப்பவர் கணேசன். இவர் ரூரல் எஸ்.பி., அலுவலகத்தில் தலைமை ஏட்டாக பணிபுரிகிறார். இவரது மகன் கார்த்திகேயன், 29; இவர் அரியாங்குப்பம் காக்காயந்தோப்பிலுள்ள பேபி சாரா அனாதைகள் இல்லத்தில் செயலராக உள்ளார். இந்த இல்லத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த திமேத்யூ மகள் லூயிசா, 24 கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கியுள்ளார்.
அப்போது லூயிசாவிற்கும், கார்த்திகேயனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் நெருங்கி பழகினர். இதன் காரணமாக லூயிசா அழைப்பின் பேரில், கார்த்திகேயன் சமீபத்தில் ஜெர்மன் சென்று வந்தார். இதன் தொடர்ச்சியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இதுபற்றி, இருவரது குடும்பத்தினரும் கலந்து பேசியதன் விளைவாக திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. புதுச்சேரி கருவடிக்குப்பத்திலுள்ள, பாரீஸ் திருமண நிலையத்தில் நேற்று காலை 7 மணியளவில், இந்து முறைப்படி ஜெர்மன் பெண்ணான லூயிசாவிற்கு, கார்த்திகேயன் தாலி கட்டினார். லூயிசா இந்து முறைப்படி பட்டுப்புடவை அணிந்திருந்தார். மணமகனின் பெற்றோர் கணேசன்-சித்ரா, மணமகளின் பெற்றோர் திமேத்யூ-பார்பரா உள்ளிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.