கோவா தீ விபத்து சம்பவம்; வெளிநாடு தப்பிச் சென்ற உரிமையாளர் நாடு கடத்தல்
கோவா தீ விபத்து சம்பவம்; வெளிநாடு தப்பிச் சென்ற உரிமையாளர் நாடு கடத்தல்
ADDED : டிச 15, 2025 12:19 AM

பணஜி: கோவாவில் தீ விபத்தில் 25 பேர் பலியான சம்பவத்துக்கு காரணமான இரவு விடுதியை நடத்தி வந்த லுாத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை நாடு கடத்தும் பணி இன்று துவங்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவா தலைநகர் பணஜியில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் பாகா கடற்கரை உள்ளது. இங்கு, 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற இரவு விடுதி செயல்பட்டு வந்தது. வார இறுதி நாட்களில் இரவு துவங்கி, விடிய விடிய இசை நிகழ்ச்சி, நடனம் உள்ளிட்ட கேளிக்கைகள் நடைபெறும். கடந்த வாரமும் இதே போல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான சுற்றுலா பயணியர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் 7ம் தேதி அதிகாலை, விடுதியின் முதல் தளத்தில், 100க்கும் மேற் பட்டோர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை உற்சாகப்படுத்த பட்டாசுகள் கொளுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு தீ விபத்து ஏற்பட்டது.
விடுதியை கூரை வேய்ந்து அழகுபடுத்தியிருந்தனர். உள் அலங்காரமும் மூங்கில்களால் செய்யப்பட்டிருந்தன. இதனால் தீ மளமளவென பற்றியது. இந்த சம்பவத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 25 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தை அறிந்த விடுதியின் உரிமையாளர்களான கவுரவ் லுாத்ரா மற்றும் சவுரப் லுாத்ரா இருவரும் டில்லியில் இருந்து தெற்காசிய நாடான தாய்லாந்துக்கு தப்பிச் சென்றனர்.
அவர்களின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியதால், தாய்லாந்து போலீசாரால் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் பணி, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் நடந்து வருகிறது.
பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால், வெளியுறவு அமைச்சகம் சார்பில் அவ சர பயண சான்று வழங்க உள்ளது. அது வழங்கப்பட்டவுடன், இன்று அல்லது நாளைக்குள் இருவரையும் இந்தியா அழைத்து வர உள்ளதாக போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

