ADDED : டிச 13, 2024 11:12 PM

பாகல்கோட்: பஸ்சில் இருந்து தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பாகல்கோட் ரபகவிபனஹட்டி அருகே யல்லட்டி கிராமத்தின் சங்கர பட்டணஷெட்டி. 2017ல் ரபகவிபனஹட்டியில் இருந்து எல்லட்டிக்கு, அரசு பஸ்சில் சென்றார்.
படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்தார். டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால், பஸ்சில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
சங்கர பட்டணஷெட்டி உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க, போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி, அவரது குடும்பத்தினர், ரபகவி பனஹட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2019ல் தீர்ப்பு கூறிய நீதிமன்றம் 60 நாட்களுக்குள் 9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு பஸ்சை ஜப்தி செய்ய, நீதிபதி எஸ்.ஏ.பாட்டீல் உத்தரவிட்டார்.
நேற்று காலையில், பாகல்கோட்டில் இருந்து ரபகவிபனஹட்டி நோக்கி வந்த, அரசு பஸ்சை நிறுத்தி, நீதிமன்ற ஊழியர்கள் மதுரகண்டி, சி.பி.,பாட்டீல் ஆகியோர் ஜப்தி செய்தனர். அந்த பஸ்சில் வந்த பயணியர், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

