ADDED : பிப் 08, 2025 06:31 AM
பெலகாவி: “பிரசித்தி பெற்ற ரேணுகா எல்லம்மா கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்று மேம்படுத்தப்படும்,” என, மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டி:
பெலகாவி சவதத்தியின் ரேணுகா எல்லம்மா தேவி கோவில் பிரசித்தி பெற்றது. கோவில் அமைந்துள்ள மலை, புனிதமானதாக கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலை போன்று, ரேணுகா எல்லம்மா தேவி கோவிலும் மேம்படுத்தப்படும்.
இம்முறை பவுர்ணமியின்போது, பக்தர்களின் வசதிக்காக சவதத்தி எல்லம்மா தேவி மலையில், மாவட்ட நிர்வாகம் குடிநீர், கழிப்பறை, பார்க்கிங், எல்.இ.டி., திரை பொருந்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. அன்னதான பவன், கால்நடை தீவன பவன் கட்ட, இன்னும் ஒரு மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும்.
சமீபத்தில் எல்லம்மா தேவி கோவில் மேம்பாட்டுக்காக, நிதி வழங்கும்படி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன்படி மத்திய அரசு, 100 கோடி ரூபாய் நிதி அறிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.