பிரசவித்த பெண்கள் மரணம் நீதி விசாரணைக்கு அரசு தயார்
பிரசவித்த பெண்கள் மரணம் நீதி விசாரணைக்கு அரசு தயார்
ADDED : டிச 20, 2024 05:33 AM
பெலகாவி: ''பல்லாரி அரசு மருத்துவமனையில் ஐந்து பெண்கள் இறந்தது தொடர்பாக, நீதி விசாரணைக்கும் தயார்,'' என்று சட்டசபையில் சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அறிவித்தார்.
பல்லாரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின்பு ஐந்து பெண்கள் இறந்தது தொடர்பாக, சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று அளித்த பதில்:
பல்லாரி அரசு மருத்துவமனையில் கடந்த நவம்பர் 9, 10, 11ம் தேதிகளில், அறுவை சிகிச்சை மூலம் 34 பிரசவங்கள் நடந்துள்ளன. இவர்களில் ஏழு பெண்கள் பிரசவத்திற்கு பின்பு கடுமையாக நோய்வாய் பட்டனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க பெங்களூரு ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைகழக டாக்டர்கள் குழு, பல்லாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முழுமையாக விசாரணை நடத்தி நவம்பர் 14ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தனர்.
பாதக விளைவு
அந்த அறிக்கையில் டாக்டர்கள் மீது எந்த தவறும் இல்லை. குளுக்கோஸ் உடலில் ஏற்றியதன் பாதகமான விளைவால் தான் மரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், குளுக்கோஸ் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பூஞ்சை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த குளுக்கோஸ் கரைசல்கள் தான் மாநிலத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் மாநிலம் முழுதும், பிரசவத்திற்குப் பின்பு பெண்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டேன்.
இருண்ட பக்கம்
பெண்கள் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மரணம் அடைந்ததை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதில் தவறு செய்தோர் யாரும் தப்பிக்க மாட்டார்கள். நீதி விசாரணை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
முதல்வருடன் ஆலோசித்து நீதி விசாரணை நடத்தப்படுவது குறித்த தகவல் வெளியிடப்படும். இந்த வழக்கில், என் மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், என் மீதும் நடவடிக்கை எடுக்கப்படட்டும். இந்திய மருந்து நிறுவனங்கள் உலக அளவில் நன்கு அறியப்பட்டவை. ஆனால், சில மருந்து நிறுவனங்களுக்கு இருண்ட பக்கமும் உண்டு.
உரிய நிவாரணம்
சில மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யப்படும் மருந்துகளை தயாரிக்க தனி பிரிவுகளை அமைத்துள்ளன. இந்த பிரிவுகளில் உயர்தரம் மற்றும் அனைத்து சர்வதேச விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் வினியோகிக்கப்படும் மருந்துகளின் நிலைமை பரிதாபத்துக்குரியது.
இந்த மருந்து நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு முகமைகள் மீது தங்கள் செல்வாக்கை செலுத்தி, தேவைக்கேற்ப அறிக்கைகளைப் பெறுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் வடகிழக்கு மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளன. இறந்த பெண்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.