அரசியல் தாக்குதலுக்கு இலக்காக மாறிய கவர்னர்கள்: துணை ஜனாதிபதி வேதனை!
அரசியல் தாக்குதலுக்கு இலக்காக மாறிய கவர்னர்கள்: துணை ஜனாதிபதி வேதனை!
ADDED : ஜூன் 30, 2025 07:51 PM

ஜெய்ப்பூர்: ''மத்திய அரசும், மாநில அரசும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தோரால் நடத்தப்படும்போது, தாக்குதலுக்கான எளிதான இலக்காக கவர்னர்கள் மாறி விடுகின்றனர். ஜனாதிபதி, துணை ஜனாதிபதியும் கூட தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது,'' என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த
நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
இன்றைய அரசியல் சூழல், ஜனநாயகத்திற்கு உகந்ததாகவோ, நமது பண்டைய கலாசார மரபுகளுக்கு ஏற்றதாகவோ இல்லை. அரசியல் போட்டியாளர் என்பவர் நமது எதிரி இல்லை. எதிரிகள் எல்லைகளுக்கு அப்பால் இருக்கலாம், ஆனால் நாட்டிற்குள் யாரும் இருக்கக்கூடாது.
சட்டசபை, பார்லிமென்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும். அப்படி காப்பாற்றத் தவறும்போது ஜனநாயக அமைப்புகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்.
ஜனநாயகத்தின் கோவில்களான சட்டசபை, பார்லிமென்டில் நடப்பது கவலை அளிக்கிறது. இந்த அமைப்புகளின் புனிதம் காப்பாற்றப்படாதபோது, மக்கள் வேறு மாற்று ஏற்பாடுகளை தேடிச்சென்று விடுவர்.
மாநில மற்றும் மத்திய அரசுகள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவையாக இருக்கும்போது, அரசியல் சட்டத்தை பின்பற்ற வேண்டியவர்கள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகின்றனர். இத்தகைய மாநிலங்களில் இருக்கும் கவர்னர்கள் தாக்குதலுக்கு எளிதான இலக்காக மாறி விடுகின்றனர்.
இப்போது, துணை ஜனாதிபதி, ஜனாதிபதியும் கூட தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இது நியாயம் இல்லை. என்னைப் பொறுத்தவரை, நான் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகவில்லை; யாருக்கும் நிர்பந்தம் கொடுப்பதும் இல்லை.
லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவும் பாரபட்சம் இன்றி செயல்படுகிறார். அவரை யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. நான் அவருடன் நெருங்கி பணியாற்றி இருக்கிறேன். எதிர்க்கட்சி ஆக்கபூர்வமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அந்த வகையில், எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய உறுப்பாகும்.இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.