நரம்பு மண்டலத்தை முடக்கி உயிர் குடிக்கும் ஜி.பி.எஸ்.,: உதவி செய்ய விரைந்தது மத்தியக்குழு!
நரம்பு மண்டலத்தை முடக்கி உயிர் குடிக்கும் ஜி.பி.எஸ்.,: உதவி செய்ய விரைந்தது மத்தியக்குழு!
ADDED : ஜன 28, 2025 07:41 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் பரவும் நரம்பியல் நோய் பாதிப்பை சரி செய்ய, சுகாதாரத்துறைக்கு ஆதரவளிக்க மத்தியக் குழு விரைந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் புனேவில், ஜி.பி.எஸ்., என்றழைக்கப்படும், கிலன் பா சிண்ட்ரோம் பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆண்கள் 68, பெண்கள் 33 பேர். 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புனேவில் ஜி.பி.எஸ்., பாதிக்கப்பட்ட ஒருவர் மேல் சிகிச்சைக்காக சொந்த ஊரான சோலாபூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனேவில் இந்த பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், விரைவு சோதனை படை மற்றும் புனே மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை, 25,578 வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திடீரென இந்த பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தொற்று நோய் இல்லை என்பதால், அச்சப்படத் தேவையில்லை என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, ஏழு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை, மஹாராஷ்டிரா அரசு நியமித்து உள்ளது.
ஜி.பி.எஸ்., என்றால் என்ன?
ஜி.பி.எஸ்., எனப்படும், கிலன் பா சிண்ட்ரோம் ஒரு அரியவகை நரம்பியல் கோளாறு. இதில் புற நரம்பு மண்டலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் தாக்கப்படுகிறது. உடலின் தசை இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கிறது. தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்குகிறது. இதனால், கால்கள் அல்லது கைகளில் உணர்திறன் இழக்கச் செய்கிறது.
தசை பலவீனம், சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனினும், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பாதிப்பு ஏற்படும்போது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மிகத்தீவிரமாக செயல்படுவதால், அது நரம்பு மண்டலத்தை முடக்குவதாகக் கூறப்படுகிறது. மாசடைந்த குடிநீர், சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாக்டீரியா தொற்றால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கை, கால்களில் திடீர் பலவீனம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.
மஹாராஷ்டிராவில் பரவும் நரம்பியல் நோய் பாதிப்பை சரி செய்ய, சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்க மத்தியக் குழு விரைந்துள்ளது. ஏழு பேர் கொண்ட உயர்மட்ட குழுவை புனேவுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பி உள்ளது.