காதல் தோல்வி பாடலை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்
காதல் தோல்வி பாடலை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்
ADDED : ஏப் 28, 2025 01:18 AM

புதுடில்லி : டில்லியில் சமீபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஒலிபரப்பான காதல் தோல்வி பாடலால், மணமகன், தன் முன்னாள் காதலியை நினைத்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
தமிழில் நடிகர்கள் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் இறுதிக்காட்சியில், மணக்கோலத்தில் இருக்கும் சிம்ரன், மண்டபத்தில் பாடப்படும் 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே...' என்ற பாடலை கேட்டு, காதலன் பிரசாந்தை நினைத்து திருமணத்தை நிறுத்துவார்.
இதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் டில்லியில் நடந்துள்ளது. இங்கு திருமணத்தை நிறுத்தியவர் மணமகன். டில்லியைச் சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடக்கவிருந்தது.
திருமணத்துக்கு முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் டி.ஜே., எனப்படும் இசை தொகுப்பாளர், பல்வேறு ஹிந்தி சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டார். அதற்கு, மண்டபத்தில் இருந்தவர்கள் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது, பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், அனுஷ்கா நடித்த ஏ தில் ஹை முஷ்கில்  படத்தில் இருந்து, பிரபலமான காதல் தோல்வி பாடலான 'சன்னா மேரேயா...' பாடலை ஒலிக்கவிட்டனர். இந்த பாடலை கேட்ட மணமகன், தன்னை அறியாமல் மனமுடைந்து அழுது, மண்டபத்தை விட்டு வெளியேறினார். இதனால் திருமணம் நின்றது.
அவரிடம் விசாரித்தபோது, 'சன்னா மேரேயா... பாடலை கேட்டு முன்னாள் காதலி நினைவு வந்துவிட்டது. அவரை மறந்துவிட்டு வேறு பெண்ணை மணக்க மனம் இடம் தரவில்லை' என கூறினார்.

