ADDED : ஜூன் 18, 2025 11:57 PM

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் பலியானோரில், 190 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளன; 159 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த, 'ஏர் இந்தியா' விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய கல்லுாரி விடுதியில் மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உட்பட 29 பேர் பலியாகினர். இறந்தவர்களின் உடல்கள் கருகியதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை வாயிலாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. நேற்று காலை வரை நடந்த சோதனையில், 190 பேரின் டி.என்.ஏ.,க்கள் சரியாக பொருந்தின.
இதையடுத்து, 32 வெளிநாட்டினர் உட்பட 159 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. டி.என்.ஏ.,க்களை ஒப்பிடும் பணி தொடர்ந்து நடப்பதாக ஆமதாபாத் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ''ஒப்படைக்கப்பட்ட உடல்களில் 127 பேர் இந்தியர்கள், நான்கு போர்த்துக்கீசியர்கள், 27 பிரிட்டிஷார், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர். 127 இந்தியர்களில் 123 பேர் விமானப்பயணியர். காயமடைந்த 71 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சையின்போது மூவர் இறந்தனர்,'' என்றார்.