ADDED : மே 01, 2026 12:32 AM

புதுடில்லி: கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட நபர், துப்பாக்கியால் சுட்டு நேற்று பிடிக்கப்பட்டார்.
வட மேற்கு டில்லி மாவட்டத்தில் உள்ள அசோக் விஹார் என்ற பகுதியில் நடந்த கொலை தொடர்பாக, சூரஜ் என்ற கானா என்பவர், போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
நேற்று அதிகாலை, அவர் புல் பிரஹலாத்பூர் என்ற இடத்தின் அருகே சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், சூரஜ், 24, என்பவரை கைது செய்ய வந்துள்ள விபரத்தை கூறி, சரணடையுமாறு அவரை எச்சரித்தனர்.
அதை சட்டை செய்யாமல், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, போலீசாரை சுட்டார்.
அவர் சுட்ட கைத் துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டா ஒன்று, போலீஸ் அதிகாரி ஒருவரின் புல்லட் - புரூப் ஆடையை துளைத்தது.
எனினும், அவர் காயமடையவில்லை. அதையடுத்து, அவர் மீது, அவரின் காலை குறி வைத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயம் அடைந்தார்.
குண்டு காயத்தால், கீழே விழுந்த அவரை சுற்றி வளைத்த போலீசார், மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அவரின் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக, டாக்டர்கள் பின்னர் கூறினர்.
மருத்துவமனையிலிருந்து அவர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட பின், அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
