இளைஞர்களை சீரழிக்கும் பாடகர்கள் குற்றவாளிகள் நடவடிக்கை எடுக்க ஹரியானா டி.ஜி.பி., உத்தரவு
இளைஞர்களை சீரழிக்கும் பாடகர்கள் குற்றவாளிகள் நடவடிக்கை எடுக்க ஹரியானா டி.ஜி.பி., உத்தரவு
ADDED : நவ 24, 2025 01:24 AM

சண்டிகர்: பாடல் மற்றும் சாகச வீடியோக்கள் வாயிலாக, இளைஞர்களை வன்முறைப் பாதைக்கு திருப்பும் பாடகர்களை குற்றவாளிகளாகத் தான் கருத வேண்டும். அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, ஹரியானா டி.ஜி.பி., ஓ.பி. சிங் பேசினார்.
ஹரியானா மாநில கூடுதல் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள், கமிஷனர்கள், துணைக் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருடன், சமூக வலைதளத்தில் வீடியோ வாயிலாக, டி.ஜி.பி., ஓ.பி.சிங், பேசியதாவது:
துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை சாகசமாகவும், வெறுப்பைத் துாண்டும் விதமாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பாடல்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுகின்றனர். இது, பெற்றோரின் போதனை, ஆசிரியரின் கல்வி, சமூக ஒழுக்கம் ஆகியவற்றை இளைஞர்களிடம் இருந்து அழித்து விடுகிறது. மாறாக, இளைஞர்களை வன்முறைப் பாதைக்கு திருப்புகிறது.
சமூகத்தை, இளைஞர்களை சீரழிக்கும் இந்தப் பாடகர்கள், குற்றவாளிகளாகத்தான் கருதப்பட வேண்டும்.
சைபர் கிரைம் பிரிவினர் சமூக ஊடகங்களைக் கண்காணித்து, இதுபோன்ற பாடகர்களை அடையாளம் காண வேண்டும். இந்தப் பாடகர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வே ண்டும்.
இதுபோன்ற சமூகத்தை சீரழிக்கும் பல பாடல்கள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
கடந்த, 5ம் தேதி துவக்கப்பட்ட 'ஆப்பரேஷன் டிராக் டவுன்' வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை, 1,439 பேர் தேடப்படும் குற்றவாளிகளும், குற்றம் சாட்டப்பட்ட 3,127 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான மற்றும் அதிரடியான இந்த நடவடிக்கையால், சட்டவிரோத நடவடிக்கைக்கு ஹரியானாவில் இடமில்லை என்பதை குற்றவாளிகளுக்குப் புரிய வைத்துள்ளது.
மேலும், கொலையாளிகளின் இலக்கில் இருந்த, 60 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து நடத்தி முடித்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
சட்டவிரோத ஆயுதச் சட்ட வழக்குகளில் திறமையாக செயல்பட்டு தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

