இரவில் தூங்கவில்லை; போராட்டம் நடத்தும் டாக்டர்களை சந்தித்து மம்தா உருக்கம்
இரவில் தூங்கவில்லை; போராட்டம் நடத்தும் டாக்டர்களை சந்தித்து மம்தா உருக்கம்
ADDED : செப் 14, 2024 02:45 PM

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
மேற்குவங்கம், கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோல்கட்டாவில் போராட்டம் நடத்தும் டாக்டர்களை மம்தா பானர்ஜி சந்தித்தார்.
பதவி பெரிதல்ல
எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய டாக்டர்களிடம், அவர் கூறியதாவது: உங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து யாரேனும் குற்றவாளிகள் என தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 'திதி'யாக உங்களைச் சந்திக்க வந்தேன். முதல்வராக இல்லை. எனது பதவி பெரிதல்ல, மக்கள் பதவி பெரிது, நான் தூங்கவில்லை. நேற்றிரவு நீங்கள் அனைவரும் இந்த கனமழையில் போராட்டம் நடத்தினீர்கள். எனக்கு தூக்கமே வரவில்லை.
கடைசி முயற்சி
போராட்டம் காரணமாக அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளின் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பார்ப்பதற்கு கவலையாக உள்ளது. நெருக்கடியைத் தீர்க்க இது எனது கடைசி முயற்சி. இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கள் கோரிக்கைகளில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என தெரிவித்தனர்.

