என் பெயரை மோசடி செய்துள்ளார்! யோகேஸ்வர் மீது மகன் புகார்
என் பெயரை மோசடி செய்துள்ளார்! யோகேஸ்வர் மீது மகன் புகார்
ADDED : நவ 21, 2024 05:19 AM

பெங்களூரு: சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே, காங்கிரசின் யோகேஸ்வர் நெருக்கடியில் சிக்கியுள்ளார். தன் மகன் கையெழுத்தை மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் ஒரு வீடு வாங்கியிருந்தார். இந்த வீடு, அவரது முதல் மனைவி மஞ்சுளா, அவரது மகன் ஷிரவண் ஆகியோர் பெயரில் இருந்தது.
இந்த வீட்டை தன் மகள் நிஷாவுக்கு ஷிரவண் சம்மதத்துடன் மஞ்சுளா பரிசாகக் கொடுத்தார்.
இந்நிலையில் இந்த வீட்டில் தனக்கு பங்கு கோரி, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஷிரவண் பெயரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷிரவண், இந்த வழக்கை தான் தொடரவில்லை. தன் கையெழுத்தை மோசடி செய்து, தன் சகோதரி நிஷாவுக்கு எதிராக தந்தை யோகேஸ்வர் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஷிரவண் தாக்கல் செய்த மனுவில், 'என் சகோதரி நிஷாவுக்கு, நானும், என் தாயும் முழுமனதாக வீட்டை பரிசாக வழங்கினோம்.ஆனால் அந்த வீட்டில் நான் பங்கு கேட்பதாக, என் பெயரில் சகோதரிக்கு நோட்டீஸ் சென்றுள்ளது. என் கையெழுத்தை யோகேஸ்வர் மோசடி செய்துள்ளார். நான் எந்த கையெழுத்தும் போடவில்லை. சொத்தில் பங்கும் கேட்கவில்லை' என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தல் முடிவு வெளியாகும் வேளையில், காங்கிரசின் யோகேஸ்வர் நெருக்கடியில் சிக்கி உள்ளார்.

