ADDED : டிச 28, 2024 09:05 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 41.2 மி.மீ., மழை பெய்துள்ளது. இது, கடந்த 101 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச டிசம்பர் மாத மழை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள்ளது.
கடந்த 1923ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஒரே நாளில் டில்லியில் 75.7 மி.மீ., மழை பெய்துள்ளது. அதன்பின், இந்த டிசம்பரில்தான் அதிக மழை பெய்துள்ளது.
நேற்று அதிகாலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெப்பநிலை நேற்று குறைந்தபட்சமாக 12.7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காலை 9:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 152ஆக இருந்தது. இது, மிதமான நிலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடுங்குளிர் நிலவிய டில்லியில் கனமழை பெய்ததால், குளிர் குறைந்தது மட்டுமின்றி காற்றின் தரமும் மேம்பட்டுள்ளது.
கனமழையால் டில்லி சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்.கே.புரம் 9வது செக்டாரில் சாலையின் ஒரு பகுதி இடிந்து, ஒரு கார் மற்றும் பைக் பள்ளத்தில் விழுந்தன.
அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.

