ADDED : ஜூலை 06, 2025 11:40 PM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் மழை தொடர்ந்து மிரட்டி வரும் நிலையில், மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்கிறது. மேக வெடிப்பு காரணமாக மண்டி உட்பட மூன்று மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையால் 566 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுஉள்ளதாக மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
சேதங்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடப்பதால் இது 700 கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என, காங்கிரசைச் சேர்ந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று கங்க்ரா, சிர்மூர், மண்டி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை மையம், 'ரெட்' அலெர்ட் விடுத்தது. மேலும் ஏழு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மண்டி மாவட்டம் சில்பாதானி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக நேற்று பெய்த கனமழையில் சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன் சிறிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
பருவமழை துவங்கிய ஜூன் 20 முதல் மாநிலத்தில் 74 பேர் இறந்துள்ளனர். இதில் 47 பேர் மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான விபத்துகளில் இறந்துள்ளனர்.