வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை நீடிப்பு : ஒரே நாளில் 29 பேர் பலி
வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை நீடிப்பு : ஒரே நாளில் 29 பேர் பலி
ADDED : ஆக 17, 2011 12:54 AM
புதுடில்லி : நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்துவரும் கனமழைக்கு, நேற்று ஒரே நாளில் மட்டும், 29 பேர் பலியாகியுள்ளனர்.
யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தலைநகர் டில்லிக்கு, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. உ.பி., மாநிலத்தில் உள்ள முக்கிய நதிகளான சார்தா, காக்ரா, ராப்டி, ரோகிணி, காங்கடாக் ஆகிய நதிகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
கங்கை நதியில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழைக்கு, நேற்று 12 பேர் பலியாகினர். இதனால், அங்கு மழைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை, 29 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முக்கிய நதிகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள 14 மாவட்டத்தைச் சேர்ந்த, 26 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில், 2 பேரும், பர்ட்வான் மாவட்டத்தில், 2 பேரும் நேற்றுப் பெய்த கனமழைக்கு பலியாகினர்.
இதையடுத்து, அம்மாநிலத்தில் மழைக்குப் பலியானோரின் எண்ணிக்கை, 27 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், நேற்றைய மழைக்கு, 6 பேர் பலியாகினர். மழையின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால், சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின் இணைப்பும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம், சில்லாய் பகுதியில், மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில், 4 பேர் பலியாகினர்.