அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை; வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை
அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை; வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை
ADDED : டிச 25, 2025 04:43 AM

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரின் 'ரிலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்குகளை மோசடி என அறிவிக்கக் கோரிய மூன்று வங்கிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், தன் 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' நிறுவனத்தின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் கடன்பெற்றிருந்தார். இதில், நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் வங்கி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இதன் முடிவில், அந்த கணக்குகள் மோசடியானவை என அறிவிக்க இந்தியன் ஓவர்சீஸ், ஐ.டி.பி.ஐ., மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகள் முடிவு செய்தன.
இது குறித்து விளக்கமளிக்க கோரி, அனில் அம்பானிக்கு மூன்று வங்கிகள் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனுத் தாக்கல் செய்தார். உரிய முறையில் கணக்கு தணிக்கை நடக்கவில்லை என, அனில் அம்பானி தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்தின் கணக்குகள் தாமதமாக தணிக்கை செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் கண்டித்தது.
மேலும், அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவன கணக்குகளை மோசடியானவை என்று அறிவிக்க கோரும் மூன்று வங்கிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

