போக்குவரத்து போலீசுக்கு உயர்தர முகக்கவசம், குளிர்கால உடை
போக்குவரத்து போலீசுக்கு உயர்தர முகக்கவசம், குளிர்கால உடை
ADDED : அக் 31, 2025 02:07 AM

புதுடில்லி:  தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதால், உயர்தர முகக்கவசம் மற்றும் குளிர்கால உடைகள் போக்குவரத்துப் பிரிவு போலீசாருக்கு வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
டில்லியில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காற்று மாசு உச்சகட்டத்துக்கு செல்கிறது. இதனால், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், தலைவலி உட்பட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.
உடல் நலன் பொதுவெளியில் அதிக நேரம் பணிபுரியும் போக்குவரத்து போலீசாரும் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். டில்லி மாநகரில் 6,000 போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கின்றனர்.
அவர்களின் உடல்நலனைக் காக்க ஒவ்வொருவருக்கும் உயர்தர முகக்கவசம், குளிர்கால உடைகள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும். இதனால், எந்த இடையூறும் இன்றி தங்கள் கடமையை செய்ய முடியும்.
இந்த ஆண்டு, 50,000 உயர்தர முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, 'என் --95' முகக்கவசம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டன.
ஆனால் இந்த ஆண்டு மாசுபாடு மற்றும் துாசியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் உயர்தர முகக்கவசம் வழங்கப்படுகின்றன. இது விலை அதிகம் என்றாலும், சாலையில் நீண்ட நேரம் பணிபுரியும்  போக்குவரத்து போலீசா ருக்கு இது அத்தியாவசியம்.
டில்லியில் காற்றின் தரக் குறியீடு சமீபநாட்களாக 350ஐ தாண்டியுள்ளது. இது, மிகவும் மோசமான நிலை என்பதால், தினமும் எட்டு முதல் பத்து மணி நேரம் சாலையிலேயே நிற்கும் போக்குவரத்து போலீசாரின் உடல் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், தோடாப்பூரில் உள்ள போக்குவரத்து பிரிவின் தலைமை அலுவலகத்தில், போலீசாரின் உடல் மற்றும் மன நலனைக் கண்காணிக்கவும், தேவைப்படும்போது சரியான சிகிச்சை பெறவும் அடிக்கடி மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கண், இதயம், நுரையீரல் உட்பட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பர். மனநலனுக்காக உளவியல் நிபுணர்களும் வரவழைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அபாய நிலை டில்லியில் மிகமோசமான நிலையில் இருந்த காற்று மாசு அபாயகரமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.
காற்றின் தரக்குறியீடு நேற்று, விவேக் விஹார் - 426, ஆனந்த் விஹார் - 415, அசோக் விஹார் - 414, பாவானா - 411, வஜிர்பூர் - 419, சோனியா விஹார் - 406ஆக பதிவாகி இருந்தது. டில்லியில் உள்ள 38 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களில் 37 நிலையங்களில் 300க்கு காற்றின் தரம் மிக மோசமான நிலையில் பதிவாகி இருந்தது.
அதேபோல, பார்வைத் திறன் நேற்று காலை 7:30 மணிக்கு விமான நிலையம் அருகே 1,000 மீட்டராகவும், சப்தர்ஜங்கில் 800 மீட்டராகவும் பதிவாகி இருந்தன.
காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் டில்லி அரசு, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து செயற்கை மழை சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனை முயற்சியில் வெற்றி அடைந்தால், டில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

