டில்லி - புனே இடையே அதிவேக ரயில் ராஜ்யசபாவில் பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தல்
டில்லி - புனே இடையே அதிவேக ரயில் ராஜ்யசபாவில் பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தல்
ADDED : பிப் 07, 2026 02:11 AM

புதுடில்லி: “டில்லி - புனே மாநகர் இடையே நேரடி பிரீமியம் ரயில் இயக்க வேண்டும்,” என, ராஜ்யசபாவில் பா.ஜ., - எம்.பி., மேதா விஷ்ராம் குல்கர்னி பேசினார்.
பார்லி.,யில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
ராஜ்யசபாவில் நேற்று பூஜ்ய நேரத்தின் போது, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., டாக்டர் மேதா விஷ்ராம் குல்கர்னி பேசியதாவது:
மஹாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் தலைநகர் டில்லி இடையே நேரடி பிரீமியம் ரயில் சேவை இல்லை. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே லட்சக்கணக்கான மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர்.
புனே மாநகர் மஹாராஷ்டிர மாநிலத்துக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே கல்வி மையமாக திகழ்கிறது. அதனால்தான், 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என புனே மாநகரம் அழைக்கப்படுகிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப மையமாகவும் திகழும் புனேவில், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், வாகன நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.
மாணவர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் புனே மற்றும் டில்லி இடையே அடிக்கடி பயணம் செய்கின்றனர்.
ஆனால், டில்லி - புனே மாநகரங்களுக்கு இடையே அதிவேக பிரீமியம் ரயில் சேவை இதுவரை துவக்கப்படவில்லை.
இது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தற்போது, புனே மற்றும் டில்லி இடையே இயக்கப்படும் ரயில்களில் செல்ல 20 முதல் 30 மணி நேரம் ஆகிறது. மேலும், பயணியர் கூட்டமும் அதிகமாக உள்ளது. இந்த ரயில்களில் வசதிகளும் குறைவாகவே உள்ளன.
ராஜ்தானி எக்ஸ் பிரஸ், வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ் பிரஸ் போன்ற ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. அதேபோல, டில்லி - புனே இடையே அதிவேக பிரீமியம் ரயில் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

