ADDED : பிப் 09, 2024 01:19 AM
பெங்களூரு, பொது இடங்களில் புகையிலை மற்றும் புகையிலை அல்லாத, 'ஹூக்கா' புகைக்க கர்நாடக அரசு உடனடி தடை விதித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய உலகளாவிய வயது வந்தோர் புகையிலை கணக்கெடுப்பில், கர்நாடகாவில் 22.8 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துவதாகவும், அதில், 8.8 சதவீதம் பேர் புகை பழக்கம் உடையவர்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், 13 - 15 வயது வரை உள்ளோரில் ஐந்தில் ஒருவர் ஏதாவது வடிவில் புகையிலை பழக்கத்துக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புகைப் பழக்கத்தை காட்டிலும் ஹூக்கா புகைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, புகையால் ஏற்படும் நோய்களை கட்டுக்குள் கொண்டு வர, கர்நாடக அரசு முதல்கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.
கர்நாடகா முழுதும் உள்ள ஹூக்கா நிலையங்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஹோட்டல்கள், உணவகங்கள், பப், பார், காபி ஷாப், கிளப் உள்ளிட்ட இடங்களில் ஹூக்கா புகைக்க, விற்பனை செய்ய உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று அறிவித்தார்.
சிறிய கண்ணாடி குவளைக்குள் போதை பொருள் இருக்கும். அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீளமான குழாய்களை உறிஞ்சினால் ஒருவிதமான போதை ஏற்படும். இதுவே ஹூக்கா என அழைக்கப்படுகிறது.

