ADDED : அக் 18, 2024 10:59 PM

பொதுவாக வெள்ளரிக்காயை, பிரியாணிக்கு பச்சடியாக பயன்படுத்துகின்றனர். சிலர் வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, மிளகாய் பொடி போட்டு சாப்பிடுவர். இதில் சூடான பக்கோடாவும் தயாரிக்கலாம். மழை பெய்யும் வேளைக்கு இதமாக இருக்கும்.
செய்முறை
முதலில் மிளகாய் பொடி, தனியா பொடி, பச்சை மிளகாயை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையில் கடலை மாவை போட்டு, நன்றாக கிளறிக் கொள்ளுங்கள்.
இதில் சிறிது, சிறிதாக தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை 20 நிமிடம் வரை வைத்திருங்கள். இதில் கொத்துமல்லி தழையை போட்டுக் கிளறுங்கள்.
அதன்பின் வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றுங்கள்; மிதமான தீயில் வையுங்கள். வட்டமாக வெட்டி வைத்துள்ள வெள்ளரிக்காயை, மாவு கலவையில் முக்கி எடுத்து, வாணலியில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து, பாத்திரத்தில் வையுங்கள்.
சிறிது ஆறியதும் மீண்டும் எண்ணெயில் போட்டு எடுத்தால், மொறு மொறு வெள்ளரிக்காய் பக்கோடா ரெடி.
சூடாக சாப்பிட்டால், சுவை அள்ளும்; குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் - ஒரு ஸ்பூன்
கொத்துமல்லி பொடி - ஒரு ஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி தழை - கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 5
வெள்ளரிக்காய் - 3 நடுத்தர அளவு
நெய் அல்லது எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- நமது நிருபர் -