ADDED : நவ 07, 2025 01:03 AM

ஜபுவா: மத்திய பிரதேசத்தில், மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவன் அவர் மூக்கை பிளேடால் அறுத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டம், படல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பில்வால். இவர் குஜராத்தில் கூலி வேலை செய்கிறார். சமீபத்தில், மனைவியையும் தன்னுடன் வேலைக்கு அழைத்துச் சென்றார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் குஜராத்தில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் திரும்பினர்.
பயணத்தின் போதே இருவரிடையே சண்டை நடந்தது. அப்போது விவாகரத்து வழங்கும்படி, ராகேஷிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் மனைவி மீது சந்தேகமடைந்த ராகேஷ், வீட்டிற்கு வந்ததும் அவரை கடுமையாக தாக்கினார்.
அதன் பின் வீட்டிலிருந்த பிளேடை எடுத்து மனைவியின் மூக்கை அறுத்துள்ளார். ரத்தம் சொட்டிய நிலையில் அவர் அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ராகேஷின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராகேஷை, போலீசார் கைது செய்தனர்.

