ADDED : செப் 05, 2025 01:52 AM
புதுடில்லி:டில்லியில், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் எனும், சிறிய அளவிலான வீடியோக்களை வெளியிட்டு வந்த மனைவியை கண்டித்தும் கேட்காததால், அவரை அடித்து கொன்றார் கணவர்.
டில்லியின் நஜாப்கார் என்ற இடத்தை சேர்ந்த, 35 வயது நபர், உ.பி.,யை பூர்வீகமாக கொண்டவர். அவர், தன் மனைவி மற்றும் 9 மற்றும் 5 வயதான இரண்டு குழந்தைகளுடன் கடந்த ஏப்ரலில், டில்லி வந்து தங்கியிருந்தார்.
அவரின் மனைவி, சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் மோகம் கொண்டிருந்தார். பல வீடியோக்களை அவர் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த அந்த நபர், மனைவியை கண்டித்தார். எனினும், அவர் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் காலையில், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவியை தாக்கிய அவர், தற்கொலை செய்து கொள்வதற்காக, பூச்சிக்கொல்லி மருந்துகளை அருந்தி, மயங்கி கிடந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், கணவன் - மனைவியை தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மனைவி, நேற்று இறந்தார். இதையடுத்து, சிகிச்சையில் இருந்த கணவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் ரீல்ஸ் மோகம் பற்றிய தகவல் தெரிய வந்தது. எனினும், மனைவியை கொன்ற குற்றத்திற்காக அவரை கைது செய்த போலீசார், விசாரிக்கின்றனர்.