ADDED : ஜன 14, 2024 11:31 PM
தட்சிண கன்னடா: தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்த கணவரை கொன்று, நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கதக் மாவட்டம், இடகி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தப்பா, 39. இவரது மனைவி கீதா, 34. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் நந்துாரில் வசித்து வந்தனர். திருமணமான பின், குடிக்கு அடிமையான ஹனுமந்தப்பா, தினமும் குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
கடந்த 10ம் தேதி இரவு இதுபோன்று குடித்து விட்டு மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் குழந்தைகளுடன் கீதா உறங்க சென்றுவிட்டார். அப்போதும் ஹனுமந்தப்பா, மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால், கோபமடைந்த கீதா, கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆனால் தனது கணவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், இறந்துவிட்டதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், ஹனுமந்தப்பா மூச்சு திணறடித்து கொல்லப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, கீதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கணவரை கொன்றதை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.