ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவை: விரைவில் வெள்ளோட்டம்
ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவை: விரைவில் வெள்ளோட்டம்
ADDED : ஜன 04, 2026 03:57 AM

புதுடில்லி: ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலுக்கான இறுதி கட்ட சோதனை ஹரியானா மாநிலம் ஜிந்த் ரயில்நிலையத்தில் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடனான ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக ஹரியானா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்தில் மிக பெரிய ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
துறையின் சார்பில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலுக்காக ஏற்கனவே பல்வேறு கட்ட சோதனை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இறுதிகட்டமாக ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே உள்ள 90 கி.மீ. தூரத்திற்கு சோதனை நடத்தப்பட உள்ளது. இந்தவகை எரிபொருள் மூலம் ரயில் சுமார் 150 கி.மீ வேகத்தில் இயக்க முடியும் என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்து பிரதமரின் அலுவகத்தில் இருந்து இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் வழக்கமான சேவைகள் துவங்கும்.
இத்தகயை ரயில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தில் புதுமைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்கும் ரயிலுக்கான எரிபொருள் 9 கிலோகிராம்எடை நீரில் இருந்து 900 கிராம் ஹைட்ரஜன் கிடைக்கும் என ரயில்வே துறை அதிகாரிகள்தெரிவித்து உள்ளனர்.
சென்னையின் ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நான்கு ஓட்டுநர் சக்தி பெட்டிகள் மற்றும் 16 பயணிகள் பெட்டிகள் ஏற்கனவே ஷகூர் பஸ்தி நிலையத்தை வந்தடைந்துள்ளன. இந்த சோதனை ஓட்டம் ஜன., 26 முதல் நடைபெறும்.
ஹரியானாவின் துணை சபாநாயகரும், ஜிந்த் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் கிருஷ்ணா மிதா, இந்தச் சாதனை குறித்து கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய ஹைட்ரஜன் ஆலை இங்கு அமைந்திருப்பது ஜிந்த் மக்களுக்குப் பெருமைக்குரிய விசயம். ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் இயக்கத்திற்குத் தயாராக உள்ளது, விரைவில் நமது பிரதமர் இதை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். என்றார்.

