இங்கேயே இறந்துவிடுவேன்: சவுதியில் இந்தியர் கதறல்!: தூதரகம் விளக்கம்
இங்கேயே இறந்துவிடுவேன்: சவுதியில் இந்தியர் கதறல்!: தூதரகம் விளக்கம்
UPDATED : அக் 25, 2025 06:55 PM
ADDED : அக் 25, 2025 06:54 PM

புதுடில்லி: உ.பி.,யைச் சேர்ந்த ஒருவர் தனது விருப்பத்துக்கு எதிராக சவுதி அரேபியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை காப்பாற்ற வேண்டும் எனக் கதறி அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக பின்பற்றப்பட்டு வந்த கபாலா என்ற நடைமுறையை 50 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா கைவிட்டுள்ளது.
இந்நிலையில், உ.பி.,யைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கதறும் வீடியோ ஒன்றை டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் போஜ்புரி மொழியில் பேசும் தொழிலாளி, எனது கிராமம் அலகாபாத்தில் உள்ளது. நான் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். ஸ்பான்சரிடம் எனது பாஸ்போர்ட் உள்ளது. நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன், ஆனால் அவர் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இந்த வீடியோவைப் பகிருங்கள், அதிகமாகப் பகிருங்கள், உங்கள் ஆதரவுடன் இந்தியாவிலிருந்து உதவி பெற்று மீண்டும் இந்தியாவுக்கு வர முடியும். நீங்கள் முஸ்லிம், இந்து அல்லது யாராக இருந்தாலும் - சகோதரரே, நீங்கள் எங்கிருந்தாலும்- தயவுசெய்து உதவுங்கள். தயவுசெய்து எனக்கு உதவுங்கள், நான் இறந்துவிடுவேன். நான் என் அம்மாவிடம் செல்ல வேண்டும். பிரதமர் மோடியின் கவனத்தை அடையும் வரை இந்த வீடியோவை பகிருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன் அந்த வழக்கறிஞர் வெளியிட்ட பதிவில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பார்ப்பவரின் மனதை உருகச் செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகத்தின் கவனத்துக்கும் வந்துள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அந்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த நபர் சவுதி அரேபியாவில் எங்கு இருக்கிறார். மொபைல் எண் உள்ளிட்டவற்றை பகிராததால் அவரை கண்டுபிடிப்பது சிரமம் எனத் தெரிவித்துள்ளது.
சவுதி பாதுகாப்புத் துறை கூறுகையில், அந்த நபரின் கூற்றுகளை ஆதாரமற்றது, பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டது என்று கூறியுள்ளது.

