பறவை மோதல்: நாக்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
பறவை மோதல்: நாக்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
ADDED : அக் 25, 2025 05:58 PM

மும்பை: நாக்பூரில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால் உடனடியாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து டில்லிக்கு நேற்று ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானம் மேலே பறக்க துவங்கிய நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று மோதியது.
இதனையடுத்து வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளின்படி விமானத்தை ஆய்வு செய்வதற்காக உடனடியாக நாக்பூருக்கே திருப்புவது என விமானி முடிவு செய்தார். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த விமானம் உடனடியாக நாக்பூரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆய்வு செய்வதற்காக அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை தங்களது ஊழியர்கள் செய்து கொடுத்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

