நான் உயிருடன் இருக்கும் வரை சி.ஏ.ஏ., சட்டத்தை அனுமதிக்கமாட்டேன்
நான் உயிருடன் இருக்கும் வரை சி.ஏ.ஏ., சட்டத்தை அனுமதிக்கமாட்டேன்
ADDED : ஜன 30, 2024 07:26 PM

கோல்கட்டா : நான் உயிருடன் இருக்கும் வரை என் மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை அனுமதிக்கமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, அகதிகளாக நம் நாட்டில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க மோடி அரசு முடிவு செய்தது.
இதற்காக குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தது. அது, 2019ல் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறியது. ஜனாதிபதியும் உடனடியாக ஒப்புதல் அளித்ததால், சட்டம் ஆனது மசோதா. ஆனால், இதுவரை அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இது குறித்து தெற்குபர்கானா 24 மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நடைமுறைக்கு வராத சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம், இன்னும் ஏழு நாட்களுக்குள் அமலுக்கு வந்துவிடும் என்றார். லோக்சபா தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழலில், இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் உத்தர் தினாஸ்பூர் மாவட்டம் ராய்கஞ்ச் மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது, சி.ஏ.ஏ.,சட்டத்தை அமல்படுத்த போவதாக அறிவித்து நான்கு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது அதை மத்தி அரசு கையில் எடுத்திருப்பது தேர்தல் ஆதாயத்திற்காக தான் என்பது தெரிகிறது. நான் உயிருடன் இருக்கும் வரை சி.ஏ.ஏ., சட்டத்தை மேற்குவங்க மாநிலத்தில் அனுமதிக்கமாட்டேன் என்றார்.