'என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது'
'என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது'
ADDED : பிப் 01, 2025 02:03 AM
புதுடில்லி'என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமையை உரிமை கோர முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான மூடுபனி திரைப்படத்தில் இடம்பெற்ற, 'என் இனிய பொன் நிலாவே' என்ற பாடல் மிகவும் பிரபலம்.
இளையராஜா இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார். இந்த பாடலின் ஒலிப்பதிவு உள்ளிட்ட காப்புரிமையை சரிகம இந்தியா லிட்., என்ற நிறுவனம் வைத்துள்ளது.
இந்த நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எங்களது அனுமதி இல்லாமல் இந்த பாடலை, வேறு ஒரு படத்துக்காக மறு உருவாக்கம் செய்துள்ளனர்.
'இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த மறு உருவாக்கப் பாடலை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வெளியிடுகிறது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய டில்லி உயர் நீதிமன்றம், 'இந்த குறிப்பிட்ட படத்தில் வரும் என் இனிய பொன் நிலாவே பாடலின் ஒலிப்பதிவுகளுக்கான காப்புரிமையை இந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனமே வைத்துள்ளது.
'எனவே, அவர்களது அனுமதியில்லாமல் பாடலின் இசையமைப்பாளரான இளையராஜா, அதை மூன்றாம் தரப்பினருக்கு தர முடியாது. அந்த பாடலை வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டது.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்த பாடலுக்கான காப்புரிமையை நாங்கள் இளையராஜாவிடம் இருந்து பெற்றுள்ளோம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.