சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: 5 கலெக்டர்களும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: 5 கலெக்டர்களும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஏப் 02, 2024 04:58 PM
ADDED : ஏப் 02, 2024 12:04 PM

புதுடில்லி: சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு வேலூர், திருச்சி உள்ளிட்ட 5 கலெக்டர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, தமிழக அரசுத்துறை உயர் அதிகாரிகள், வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும், விசாரணையை தொடர அனுமதி அளித்தது.
அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம், சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையும் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம், ''தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் ஏப்ரல் 25ம் தேதி சம்பந்தப்பட்ட 5 கலெக்டர்களும் அமலாக்கத்துறை சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது. வழக்கு மீதான விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

