ADDED : பிப் 17, 2024 11:24 PM

தட்சிண கன்னடா,: தெரு நாய்கள் தாக்குதலுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., மொய்தீன் பாவாவும் தப்பவில்லை. நாய் கடித்ததால், கடந்த 25 நாட்களாக, சக்கர நாற்காலியில் வலம் வருகிறார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் எந்த தெருவுக்கு, எந்த சாலைக்குச் சென்றாலும், தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியாது. சாலையில் செல்லும் பைக், கார் உட்பட வாகனங்களை விரட்டிச் செல்கின்றன.
அதுமட்டுமின்றி, அவர்களை கடித்து காயப்படுத்தி வருகின்றன.
நகரின் காயத்ரி பூங்காவில் காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ., மொய்தீன் பாவா நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த நாய் ஒன்று, பாவாவின் காலில் கடித்தது. கால் நரம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை.
இச்சம்பவம் நடந்து, 25 நாட்களாக, சக்கர நாற்காலியில் வலம் வருகிறார்.
இதற்கு கடும் அதிருப்தி அடைந்த அவர், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்து உள்ளார்.
'தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெருக்களில் உள்ள நாய்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என, அவர் கோரிக்கை விடுத்துஉள்ளார்.
சக்கர நாற்காலியில் மொய்தீன் பாவா. இடம்: மங்களூரு.