எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையில் தலையிட தேர்தல் கமிஷன் மறுப்பு
எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையில் தலையிட தேர்தல் கமிஷன் மறுப்பு
ADDED : ஏப் 17, 2024 01:29 AM

புதுடில்லி : தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவதை தேர்தல் கமிஷன் தட்டிக்கேட்க வேண்டும் என, பல்வேறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்த நிலையில், 'சட்டம் மற்றும் நீதித்துறையின் செயல்பாட்டில் நாங்கள் குறுக்கிடுவது முறையல்ல' எனக்கூறி, தேர்தல் கமிஷன் ஒதுங்கிக் கொண்டது.
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தல் நேரத்தில் பிரசாரத்தை முடக்குவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
விதிமீறல்
கெஜ்ரிவாலை போலவே பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் மத்திய விசாரணை அமைப்புகளால் ஊழல் வழக்கில் குறிவைக்கப்படுவதை தேர்தல் கமிஷன் தலையிட்டு தட்டிக்கேட்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் முறையிட்டன.
இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:
குற்றவியல் வழக்கு விசாரணையில் அரசியல் தலைவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டு, அது நீதித்துறையின் பரிசீலனை மற்றும் உத்தரவுகளின் கீழ் இருக்கையில், அந்த விவகாரம் தேர்தல் கமிஷனில் முன்வைக்கப்படும்போது, அரசியலமைப்பு சாரம்சத்தின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் வழிநடத்தப்படுகிறது. தேர்தல் களத்தில் அனைவருக்கும் சரி சமமான வாய்ப்பு மற்றும் வேட்பாளர்களின் பிரசார உரிமைகளை பாதுகாப்பதில் தேர்தல் கமிஷன் உறுதியுடன் செயல்படுகிறது.
அதே நேரம், நீதித்துறை யின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடுவது முறையாக இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரு மாத காலத்திற்கு தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக வந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொது வெளியில் முதல்முறையாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அதன் விபரம்:
கடந்த ஒரு மாதத்தில், ஏழு அரசியல் கட்சிகளை சேர்ந்த 16 பிரதிநிதிகள் குழு, தேர்தல் கமிஷனரை நேரடியாக சந்தித்து புகார்கள் அளித்துள்ளன. கிட்டத்தட்ட 200 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
நடவடிக்கை
அனைத்து அரசியல் கட்சிகளும் சரிசமமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. பா.ஜ., - காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப் பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்களை பேசும் தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக இணையதளம் வாயிலாக 2.68 லட்சம் புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில், 2.67 லட்சம் புகார்கள் சராசரியாக 100 நிமிடங்களில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

