தர்மம் நிலைத்திருக்கும் வரை இந்தியாவை அசைக்க முடியாது: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெருமிதம்
தர்மம் நிலைத்திருக்கும் வரை இந்தியாவை அசைக்க முடியாது: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெருமிதம்
UPDATED : ஜன 19, 2026 07:08 AM
ADDED : ஜன 19, 2026 05:04 AM

மும்பை: “தர்மம் நிலைத்து இருக்கும் வரை, நம் பாரத நாடே விஸ்வகுருவாக தொடர்ந்து நீடிக்கும். நம்மை யாரும் அசைக்க முடியாது. இங்கு இருப்பது போல, வேறு எந்த நாட்டிலும் ஆன்மிக ஞானம் இல்லை,” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
தர்மம் வழிநடத்திச் செல்லும் வரை, நம் பாரத நாடு தொடர்ந்து விஸ்வகுருவாகவே நீடிக்கும். நம் நாட்டில் இருப்பது போல, வேறு எந்த நாட்டிலும் ஆன்மிக ஞானம் இல்லை. இது, நமக்கு முன்னோர்கள் அளித்த மிகப்பெரிய பொக்கிஷம்.
பிரதமரோ, நானோ அல்லது மக்களோ யாராக இருந்தாலும் அனைவரையும் இயக்குவது ஒரு மகத்தான சக்தி. வாழ்க்கை என்ற வாகனத்தை அந்த சக்தி இயக்கும் வரை விபத்து என்பதே இருக்காது; அந்த சக்தியை இயக்குவது தர்மம்.
ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் தர்மம் தான் வழிநடத்திச் செல்கிறது. படைப்புகளை நெறிபடுத்தும் விதிகள் தான் தர்மம் ஆனது. அனைத்தும் அந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.
தர்மம்
குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு உரியது என சுருக்கிவிட முடியாது. இயற்கையில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் அதன் உள்ளார்ந்த கடமையும், ஒழுக்கமும் தர்மத்தின்படியே வகுக்கப்பட்டுள்ளது.
நதியின் தர்மம் பாய்வது; நெருப்பின் தர்மம் கனன்று எரிவது; மகனுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது; நாட்டை ஆள்பவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. ஒழுக்கத்திற்கான விதிகளும் இருக்கின்றன.
நம் முன்னோர்கள் தங்களது ஆன்மிக பலத்தாலும், மகத்தான தவத்தாலும் தர்மத்தின் நெறிகளை புரிந்து கொண்டனர்.
குடிசையில் வசிக்கும் ஒருவரால் தர்மத்தை பற்றி சொற்பொழிவு ஆற்ற முடியாமல் போகலாம். ஆனாலும், அவரது நாடி, நரம்புகளில் தர்மம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியிலும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “சமூகத்தில் இருந்து ஜாதியை ஒழிக்க வேண்டுமெனில், முதலில் அவரவர் மனங்களில் இருந்து அதை ஒழிக்க வேண்டும். அப்படி நடந்தால் அடுத்த 10 அல்லது 12 ஆண்டுகளுக்குள் ஜாதியை முற்றிலும் ஒழித்துவிடலாம்,” என்றார்.

