UPDATED : செப் 08, 2026 10:52 PM
ADDED : செப் 08, 2026 09:45 PM

புதுடில்லி;எல்லை விவகாரம் தொடர்பாக, இந்தியா - சீனா ராணுவ உயர் தளபதிகள் பேச்சு நடத்தினர்.
நம் அண்டை நாடான சீனாவுடன், 3,488 கி.மீ., துார எல்லையை நம் நாடு பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை விவகாரம் தீவிர பிரச்னையாக உள்ளது. அருணாச்சலுக்கு புதிய பெயர் வைத்து சீனா கொண்டாடும் நிலையில், அதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நம் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், டில்லியில் கூறியதாவது:
இந்தியா - சீனா சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, கடந்த 6-ல், அருணாச்சலின் வச்சாவிலும், 7-ல், சீனாவின் தமை பகுதியிலும், மூத்த ராணுவ தளபதி அளவிலான சந்திப்பு முதன்முறையாக நடந்தது. சீனாவுடனான உறவு படிப்படியாக நேர்மறையான திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு, எல்லை பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவது மிக முக்கியமானது என்பதை நம் ராணுவம் எடுத்துரைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, சீன அதிபர் ஷீ ஜின்பிங் டில்லிக்கு விரைவில் வரவுள்ள நிலையில், இந்த உயர் மட்ட ராணுவ பேச்சு நடந்துள்ளது.
