ADDED : டிச 17, 2024 06:31 PM

புதுடில்லி: ஐந்து ஆண்டுகளுக்கு பின் நாளை (டிச.18) பீஜிங்கில், இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளின் 23வது கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியா, சீனா ஒப்புக்கொண்டபடி, இருநாட்டு எல்லைப் பிரச்னைகளுக்கான சிறப்பு பிரதிநிதிகளின் 23வது கூட்டம் நாளை பீஜிங்கில் நடைபெறும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லிவ் ஜியான் அறிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தைக்கான இந்தியாவின் சிறப்பு பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில், சீன தரப்புக்கு வெளியுறவு அமைச்சர் வாங் யி தலைமை தாங்குகிறார்.
கிழக்கு லடாக்கில் கட்டுப்பாட்டுக் கோட்டில் படைகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் புதுடில்லியில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்திய சில நாட்களில் அவர்களின் சிறப்பு பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின் மூலம், எல்லைப் பகுதிகளில் அமைதியை நிர்வகித்தல் மற்றும் எல்லைப் பிரச்னைக்கு நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய்வதில் கவனம் செலுத்துவோம் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.