UPDATED : ஆக 21, 2026 10:46 PM
ADDED : ஆக 21, 2026 09:35 PM

புதுடில்லி: இந்திய ரயில்வே, டில்லி மெட்ரோ மற்றும் நமோ ரேபிட் ரயில் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சிறிய சீர்திருத்தங்கள் கூட, காலத்திற்கேற்ப இந்தியா மாறி வருவதைக் காட்டுகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளை கண்டுள்ளது. அதில் கிடைத்த அனுபவங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்தி உள்ளன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு உள்ளது. தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது.
கவலை
இந்த உணர்வு உடனேயே இந்தியா எப்போதும் முன்னேறி வருகிறது. அதனால், தான் ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்ற போது 'ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதை தாரக மந்திரமாக கொண்டு இருந்தது. பகிரப்பட்ட எதிர்காலம் குறித்த உணர்வும், அதனுடன் வரும் பொறுப்புஉணர்வும், 21ம் நூற்றாண்டில் உலகின் பல பிரச்னைகளுக்குத் தீர்வுகளை வழங்குகின்றன. அதே வேளையில் உலகளாவிய வளர்ச்சி குறித்து பல கவலைகளும் உள்ளன.
ஒளிமயமான இந்தியா
சமீப காலங்களில் உலகம் மிகவும் ஆபத்தான போக்கை கண்டுள்ளது. வளங்கள் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன. பரஸ்பர நம்பிக்கையின்மை நிலவும் சூழல் நிலவுகிறது. இவை உலகிற்கு புதிய சவால்களை உருவாக்குகின்றன. இருப்பினும் இத்தகைய சூழலிலும் வளர்ச்சிக்கான மற்றும் நம்பிக்கைக்கான ஒரு ஒளிமயமான இடமாகலே உலகம் இந்தியாவை பார்க்கிறது.
வாய்ப்புகள்
அடிப்படை தேவைகளுக்குக் கூட அரசிடம் மக்கள் கெஞ்சும் வகையில் அவர்களை பற்றாக்குறை நிலையிலேயே வைத்து இருப்பதை முந்தைய அரசுகள் கொள்கையாக வைத்து இருந்தன. முந்தைய ஆட்சியில் லைசென்ஸ் ராஜ் முறை வேலைவாய்ப்பின்மையை அதிகப்படுத்தியது. பாஜ அரசின் ஊக்கத்தொகை சார்ந்த உற்பத்தி திட்டம் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
நாங்கள் விதிமுறைகளை மட்டும் மாற்றவில்லை. விதிமுறைகள் சார்ந்த ஒட்டு மொத்த கொள்கையையே மாற்றுகிறோம். சட்டத்தின் கீழ் வெளிப்படையாகத் தடை செய்யப்படாத ஒரு செயலைச் செய்வதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது.
நடைமுறை மாற்றம்
கொள்கை அளவில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை பாஜ அரசு, கொண்டு வருகிறது. நிர்வாகம் மற்றும் மக்களின் வாழ்க்கை சூழலை எளிதாக்குதல் ஆகிய நிலைகளிலும் சீர்திருத்தங்களை செயல்படுத்தி வருகிறோம்.
அனுமதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அணுகுமுறையில் இருந்து தடை செய்யப்பட்டவை தவிர மற்றவை அனைத்தும் அனுமதிக்கப்படும் என்ற நடைமுறைக்கு மாறி வருகிறோம். இந்திய ரயில்வே, டில்லி மெட்ரோ மற்றும் நமோ ரேபிட் ரயில் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சிறிய சீர்திருத்தங்கள் கூட, காலத்திற்கேற்ப இந்தியா மாறி வருவதைக் காட்டுகின்றன.
பலம்
முன்பு வெளிநாடு செயற்கைக்கோள் இந்தியாவை புகைப்படம் எடுத்தாலும், அனுமதி இல்லாமல், இந்திய வரைபடத்தை யாராலும் தயாரிக்க முடியாது. இதனை நாங்கள் மாற்றி உள்ளோம். இந்தியாவின் எல்லைகள் உள்கட்டமைப்பை நாட்டின் பலமாக பார்க்கிறோம். எல்லை உள்கட்டமைப்பை மாற்றி உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
